Sunday, January 1, 2017

2016

இரெண்டாயிரத்துப்பதினாறாம் ஆண்டு எனக்கு மிக முக்கியமானது. இதை எப்பவும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தே இந்தப் பதிவு.




அதற்கும் முந்தைய ஆண்டின் இறுதி மாதம், மழை, வெள்ளம்,  மின்சார இணைப்பு துண்டிப்பு என கடந்தது சென்னைக்கு. என் மகன்பிறந்து ஒருவாரம் ஆகியிருந்தது. அம்பத்தூர் எஸ்டேட் துவங்கி பாடி, அண்ணாநகர் என நீண்டு பெருங்களத்தூர் தாண்டி சென்னை மிதக்கிறது. ஆனால், என் வீடு இருக்கும் பகுதி பாதுகாப்பாக இருந்தது. மகனின் பெயர் சூட்டல் விழா சிக்கனமாக முடிந்தது. பன்னிரெண்டு பெயர்கள் வைத்தோம். மொத்தம் ஒன்பது பேர் இருந்தோம். நெல்லில் பேரெழுத தாய்மாமனும், காப்பிட அத்தையும் வர இயலவில்லை. ஒன்று விட்ட மாமா வந்து பெயரெழுதினார்.  மொத்தமாக சேர்த்து அரைமணி நேரம் மின்சாரம் துண்டிப்பு இருந்தது. பால், காய்கறிகள், மெழுகுவர்த்தி, நூடுல்ஸ் எல்லாம் தாராளமாகவே கிடைத்தன. மொபைல் சிக்னல் இருந்தது. இங்கிருந்து பொருட்களை வாங்கிச் சென்று பிறபகுதிகளில் வசிக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விநியோகித்தோம். இருபது தேதிக்குப் பிறகு சென்னை ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது. டிசம்பர் 26, 27 தேதிகளில் கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. நண்பர்கள் ஒரு van வைத்து சென்றுவந்தோம். வெள்ளக்காட்டைத் தாண்டிய ஒரு ஆறுதல் அது. காலை ஆறு மணிமுதல் இரவு உறங்கும் வரை உரையாடல்கள், வேடிக்கைகள், பாடல்கள் என சென்ற இரு நாட்கள்.  ஜெயமோகனை நான் வாசிக்க ஆரம்பித்த நாள் எதுவென்றால், இந்த வலைப்பூ தேங்கிய அந்தநாள் என சொல்லலாம். எழுத்து என்பது என்ன என உணர்ந்து / உணராமல் நின்ற தருணம் அது. எழுத்து மட்டுமில்லாமல் மேடைப்பேச்சு / நேர்ப்பேச்சு அனைத்தின் மூலமாகவும் அவர் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். என் ஆசிரியர் ஜெயமோகன் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.



புத்தாண்டின் இரவில் கடற்கரையில் உலாவுவது என்ற வழக்கம் முன்பு இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக இல்லை. ஆமாம். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. 2016ம் ஆண்டில் புதிய வேலைக்கு மாறினேன். முதல் விமான பயணம் செய்தது இந்த ஆண்டுதான். யோகாசனம் கற்றுக்கொண்டதும் வசனம் உள்ள ஆங்கிலப்படங்கள் அதிகம் பார்த்ததும் இந்த ஆண்டில்தான். இந்த லெளகீக சாதனைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு மற்றவைகளை சாராம்சமாக தொகுத்து பார்க்கிறேன்.

மயிலாப்பூர் ராமக்ருஷ்ணமடத்தில் புத்தாண்டின் காலை தரிசனம் மற்றும்  மதிய உணவு, மாலையில் ஸோர்பா தெ க்ரீக் நாவல் குறித்து எஸ்.ரா. அவர்களின் உரை என புத்தாண்டு ஆனந்தமாகவே துவங்கியது. அந்த உரையின் போது நண்பர் முரளி க்ருஷ்ணன் அறிமுகமானார்.



சென்னை வெண்முரசு கூட்டங்கள் என் வாசிப்பு முறையை மாற்றியமைத்ததில் மிக முக்கியமானவை. வெண்முரசு நாவலின் கதைகளையும் அதன் உதிரி கதாபாத்திரங்களையும் பற்றி பேசிய விவாதங்கள் நாங்களறியாமலேயே மாறி வெண்முரசு சொல்லும் தத்துவங்கள், மனித நாகரீகங்கள் என வெண்முரசை ஒரு கருவியாகக்கொண்டு மற்றவைகளை விவாதித்து அறிவதாக மாறிவிட்டன. 2015 ல் துவங்கி இன்று வரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றன.

நண்பர்களுடனான குழும உரையாடல்கள் நல்ல புரிதலை ஏற்படுத்தின. நடப்பு அரசியல், சினிமா, அறிவியல் என அனைத்தையும் பற்றி விவாதித்தோம். அனைவருமே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மூலமாக அறிமுகமானவர்கள். வெவ்வேறு இடங்களில் பணிகளில் இருப்பவர்கள். ஜெயமோகன் என்கிற மந்திரக்கயிறு இணைத்து வைத்திருக்கிறது.



கபாலி திரைப்படத்தின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அது  குறித்த நீயா நானா சிறப்பு நிகழ்ச்சியில் ரஜினி ரசிகனாக  கலந்துகொண்டேன். நண்பர் சுனில் கிருஷ்ணன் மூலமாக என்னையும்  சுரேஷ்பாபுவையும் இந்த நிகழ்சிக்கு அழைத்திருந்தார்கள். தூத்துகுடி, திருநெல்வேலி, வேலூர் என பல மாவட்டங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்ட ரசிகர்களை கண்டு உரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது.



நண்பர் கெ.ஜெ.அசோக் குமார் அவர்களின் சாமத்தில் முனகும் கதவு சிறுகதைத்தொகுதி வெளியானது. அந்த விழாவில் தான், எழுதாளர்கள் கீரனூர் ஜாகீர் ராஜா, ப்ரான்ஸிஸ் கிருபா ஆகியோரை சந்தித்து உரையாடினேன்.

எழுத்தாளர். திரு. யூமா வாசுகி அவர்களை சந்தித்தது என் வாழ்வின் நல்லூழ்களில் ஒன்று. சென்ற தலைமுறையின் தஞ்சை மாவட்ட கதைசொல்லிகளான தி.ஜா,எம்.வி. வெங்கட்ராம் போன்றவர்களை அடுத்து என் தலைமுறைக்கான தஞ்சை மாவட்ட எழுத்தாளர் யுமா வாசுகி அவர்கள்.ரத்த உறவு   என்கிற தமிழின் முக்கியமான க்ளாசிக் நாவலை படித்ததும்  சென்றஆண்டுதான். இந்த நாவல் பற்றிய ஒரு பதிவு இந்த வலைப்பூவில் பாதியில் நிற்கிறது. அதை முடித்து பதிவேற்றவேண்டும்.



எங்க சுத்தியும் ரங்கனை சேவி என, இந்த பதிவில் ஜெயமோகனே மீண்டும் வருகிறார். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் அவருடன் நண்பர்கள் உரையாடியது, பின் மறுநாள் மே-1, குருஜி செளந்தர் அவர்களின் சத்யானந்தா யோகா மையத்தை ( புணரமைப்புக்குப் பின் ) திறந்து வைத்து அன்றைய வெண்முரசு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை, பின் அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி உரை, பின் சமண தலங்கள் உலா மற்றும் நடைபயணங்களில் காரில் செல்கையில் அவர் கூறும் கருத்துக்கள் வேடிக்கை துணுக்குகள் என பல சுவாரசியங்கள்

மகாசிவராத்திரியன்று நண்பர்களுடன் திருவாலங்காடு, திருநின்றவூர், திரிசூலம், திருவாச்சூர் என சிவனருள் விழையும் பயணம், பின் திருவாசாக முற்றோதல், உத்தமர்கோயில் கிராதமூர்த்தி என தொடர்ந்தது, அதேநேரம், வெண்முரசில் கிராதம் வெளிவந்ததும் தற்செயலாக அமைந்தது



சில துக்க நினைவுகள், கவிஞர். குமரகுருபரன், கவிஞர். ஞானக்கூத்தன் , இரு கல்லூரி நண்பர்கள், ஒரு அலுவலக தோழர், மற்றும் இரு நண்பர்களின் தாயார் / தந்தை என கனமான நாட்கள்.

சிறுகதைகள் எழுத முயற்சித்து,அவற்றில் இரண்டு கதைகள் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. முதல் கதையான விடிவு கதைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் நீண்ட விமர்சனம் எழுதினார். ஜெ.தளத்திலும் பலர் விமர்சனங்களை கூறினார்கள். இரண்டாம் கதையான பழனிக்கு  சொல்வனத்தில் மைத்ரேயன் ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். முதல் கதைகளுக்கே இப்படி அமைவதெல்லாம் ஈ உட்கார தேங்காய் விழுவது போலத்தான். ஆனால், எனக்கு அமைந்தன. இதெல்லாம் அந்தரங்கமாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியையே முதலில் அளித்தன. என் மீதான இந்த அக்கறைக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன். நண்பர்கள் சிவா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நட்பாஸ் ஆகியோர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். அவர்களுக்கும் நன்றி. வாசிப்பை சற்று மேம்படுத்திக்கொண்டு எழுதுவதைத் தொடர வேண்டும்.



வருட இறுதியில் மீண்டும் விஷ்ணுபுரவிழா. அதுகுறித்து எழுதிய கடிதம் ஜெ. தளத்தில் வெளியாகியுள்ளது. இரா.முருகன், பவா. செல்லத்துரை, பாவண்ணன், ஹெச். எஸ்.சிவப்ரகாஷ் ஆகியோரை முதன்முறையாக சந்தித்தேன்

சென்ற ஆண்டு முதல்நாள் வாங்கிய ராமக்ருஷ்ணரின் அமுதமொழிகள் புத்தகங்களை இன்று முதல் படிக்கத் துவங்கியுள்ளேன்.


சென்ற ஆண்டில் படித்த புத்தகங்கள் பட்டியல் அளித்துள்ளேன். அனைத்தும் கதைகள் / நாவல்கள்.என்னுள் இன்னும் கதை கேட்கும் சிறுவன் ம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான் என புரிந்துகொள்கிறேன்.

நாவல்கள் / தொகுப்புகள்
துறைவன் - கிறிஸ்
மத்தகம் - ஜெயமோகன்
அழகான அம்மா ( ரஷ்ய சிறார் கதைகள்) - யூமா வாசுகி
காடு - ஜெயமோகன்
நிழலின் தனிமை - தேவிபாரதி
ரத்த உறவு - யூமா வாசுகி
கன்னி - ப்ரான்ஸிஸ் கிருபா
அரசூர் வம்சம் - இரா. முருகன்
கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன் ( தமிழில்:-  யூமா வாசுகி )
கன்யாகுமரி - ஜெயமோகன்
கன்னிநிலம் - ஜெயமோகன்
நெடுங்குருதி - எஸ். ராமக்ருஷ்ணன்
துயில்  - எஸ். ராமக்ருஷ்ணன்
சஞ்சாரம்  - எஸ். ராமக்ருஷ்ணன்
சிதம்பரநினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு ( தமிழில்:- ஷைலஜா)
பனிமனிதன் - ஜெயமோகன்
சாமத்தில் முனகும் கதவு - கெ.ஜெ.அசோக் குமார்

வெண்முரசு வரிசையில், வெய்யோன், பன்னிரு படைக்களம், சொல்வளர்காடு மற்றும் கிராதம்

கட்டுரைகள் / சம்பவங்கள்

இவர்கள் இருந்தார்கள் -ஜெயமோகன்
குற்றம் புரிந்தவர் - சுபா

சிறுகதைகள்

அ.மி (20கதைகள்)
திஜா (20 கதைகள்)
இரா.முருகன் ( 18 கதைகள்)
அ.முத்துலிங்கம்( 10 கதைகள்)

பாதியில் நிற்பவை

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்
ஆதிரை - செயந்தன்
ஆரோக்ய நிகேதனம் - தாராஷங்கர் பந்த்யோபாத்யாய
Everyday Yogi- H.S.Shivaprakash

பாதிக்கு முன் நிற்பவை :-) 

மயக்குறு மகள் - காயத்ரி சித்தார்த்
மோகமுள் - திஜா
Sapiens - Yuval Noah harari


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!













No comments:

Post a Comment